Wednesday, 1 June 2011

சரத்குமார் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு


தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சரத்குமார் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு மேற்கொண்டார். தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான ஆர்.சரத்குமார் கடந்த 2 நாட்களாக தென்காசி தொகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். 

இன்று காலை அவர் தென்காசியில் 32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். காண்டிராக்டர்களை நேரில் அழைத்து பணிகளை துரிதமாக முடிக்க அறிவுரை வழங்கினார். தொடர்ந்து சர்வீஸ் ரோடு அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். ரெயில்வே நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட வேண்டிய பாலத்திற்கான பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சர்வீஸ் ரோடு அமைப்படாததால் போக்குவரத்துக்கு ஏற்படும் சிரமங்களை எடுத்துக்கூறினர். 

தொடர்ந்து சரத்குமார் எம்.எல்.ஏ. தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு வார்டாக சுற்றி நோயாளிகளை நேரில் சந்தித்து மருத்துவமனையில் உள்ள நிறை, குறைகளை கேட்டறிந்தார். மருத்துவர்களை அழைத்து சிகிச்சை முறைகள் கேட்டறிந்தார். அப்போது சிலர் மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை உள்ளதாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக சரத்குமார் எம்.எல்.ஏ. உறுதியளித்தார். 

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தென்காசி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளிட்ட அதிநவீன கருவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவமனையில் சுத்தமாக வைத்திருக்க நோயாளிகளும் ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர், செவிலியர், துப்புரவு பணியாளர் பற்றாக்குறை போக்கப்படும். அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு மருத்துவமனையில் இன்னும் தரம் உயர்த்தப்படும். ரெயில்வே மேம்பால பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். சர்வீஸ் ரோடு 2 மாதத்தில் போடப்படும். தென்காசி தொகுதியில் கூட்டணி கட்சியினரையும் அழைத்து பேசி வளர்ச்சிக்காக பணிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது மாவட்ட செயலாளர் தங்கராஜ், கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், தென்காசி நகர சமக செயலாளர் வில்சன், பாவ+ர்சத்திரம் நகர செயலாளர் காந்திராஜ், அதிமுக நகர செயலாளர் முத்துகுமார், வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Related Posts Plugin for WordPress, Blogger...